பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது அரசியல் சாசன சரத்துகளுக்கும் 1992ல் உறுதி செய்யப்பட்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புக்கும் முற்றிலும் முரணானது என்பதால், மத்திய தந்தி அலுவலகங்கள் முன்பாக வரும் 16 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.
கோவை: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை எதிர்த்து வரும் 16ம் தேதி கோவையில் மத்திய தந்தி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை மத்திய அரசு அறிவித்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் கூட்டமைப்பு சார்பாக கடந்த 2021 வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை செப்டம்பர் 13ம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில், இது தொடர்பாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு நிர்வாகிகள் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதில் பேசிய கூட்டமைப்பின் தலைவர் ரத்தினசபாபதி, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது அரசியல் சாசன சரத்துகளுக்கும் 1992ல் உறுதி செய்யப்பட்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புக்கும் முற்றிலும் முரணானது.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 1992ல் உறுதி செய்யப்பட்ட 27% இட ஒதுக்கீட்டில், இந்த 30 ஆண்டுகளில் இன்னும் சராசரியாக 15 சதவீத இட ஒதுக்கீட்டை கூட கொடுக்காமல் புறக்கணித்து வரும் நிலையில், மத்திய அரசின் பொருளாதார அடிப்படையிலான 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுமையானது.
எனவே, மத்திய அரசின் இந்த 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து, அனைத்து சமுதாய ஏழை மக்களுக்கும் இட ஒதுக்கீடு பெற சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, மத்திய தந்தி அலுவலகங்கள் முன்பாக வரும் 16 ந்தேதி அனைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த சந்திப்பின் போது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் துணைத் தலைவர் வெள்ளியங்கிரி உட்பட உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.