வாகனங்களை மாற்றுப் பாதையில் செல்ல வழிவகை செய்யும் பட்சத்தில் மட்டுமே குறித்த காலத்திற்குள் மேம்பால பணிகளை முடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை: உக்கடம் - ஆத்துப்பாலம் இடையேயான மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வாகன நெரிசல் காரணமாக கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பாலத்திற்கு இடையே பாலக்காடு ரோடு மற்றும் பொள்ளாச்சி ரோட்டில் இறங்கு தளம் அமைக்க பில்லர்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
தற்போது, பாலத்தின் இணைப்பு பகுதிக்கான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த வழிப்பாதையில் பகல், இரவு என இரண்டு வேலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த பாலம் அமைக்கும் வழியை விட்டால், வாகனங்கள் 3 கி.மீ தூரம் வரை சுற்றிச் செல்ல வேண்டும் என்பதால், இவ்வழியில் உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோட்டில் இருந்து உக்கடம் நோக்கி வரும் வாகனங்கள் நெரிசலில் திணறுவது வாடிக்கையாகி விட்டது.
எனவே, வாகன நெரிசல் காரணமாக இந்த பகுதியில் மேம்பால பணி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கான்கிரீட் பாலங்கள், இரும்பு பொருட்கள், ஜல்லி, சிமெண்ட் கொட்ட இடமின்றி கட்டுமான பணியாளர்கள் திணறி வருகின்றனர்.
மேலும், மேம்பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் இடவசதியின்றி பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். பணி நடத்தும் போது வாகனங்களை அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், வாகனங்களை மாற்றுப்பாதையில் விட எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக நெடுஞ்சாலை துறையிடம் கேட்ட போது, இரு பிரதான சாலையில் இருந்து அதிக வாகனங்கள் வந்து செல்கிறது. செல்வபுரம் பைபாஸ், புட்டுவிக்கி ரோட்டில் வாகனங்கள் சென்று வரலாம். ஆனால், அவ்வாறு செல்லாமல் பெரும்பாலான வாகனங்கள் 3 கி.மீ தூரத்தை சுற்றிவர சலித்துக் கொண்டு, போக்குவரத்து நெரிசலில் காத்திருக்கும் நிலை இருந்து வருகிறது.
கட்டுமான பணிகள் தொடங்கும் போது, அடைத்து வைக்கப்பட்ட சாலையில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் சென்று வரும் திட்டம் இருந்தது. இதன் காரணமாக போக்குவரத்து பிரச்சினை ஓரளவுக்கு சமாளிக்கப்பட்டது. இப்போது நிலைமை கைமீறி போய்விட்டது.
கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பகல் நேரத்திலும், இரவு நேரத்திலும் கட்டுமான பணி செய்ய முடியவில்லை எனக்கூறும் பணியாளர்கள், எப்படி பாலத்தின் இறங்கு தளம் பணிகளை மேற்கொள்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.
எனவே, வாகனங்களை மாற்றுப் பாதையில் செல்ல வழிவகை செய்யும் பட்சத்தில் மட்டுமே குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்க முடியும் என்று பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.