வங்கி ஏடிஎம்-ல் பணம் வராமல் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது குறித்து புகாரளித்தும் கண்டு கொள்ளாததால் விரக்தியடைந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: எடுக்காத பணத்திற்கு எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததையடுத்து, வங்கி மேலாளரிடம் முறையிட்ட போது, உரிய விளக்கமளிக்காமல் அலைக்கழித்ததாக குற்றம்சாட்டி ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரால் பரபரப்பு நிலவியது.
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ராதாகிருஷ்ணன். இவர் கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதி வடவள்ளியில் கனரா வங்கி ஏ.டி.எம் இல் 2500 ரூபாய் பணம் எடுக்கச் சென்றுள்ளார். ஆனால் பணம் வராத போதிலும், வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு விட்டதாக அவருக்கு SMS வந்துள்ளது.
இதனால், குழப்பமடைந்த ராதாகிருஷ்ணன் அவர் வங்கிக் கணக்கு வைத்துள்ள இந்தியன் வங்கிக்கு சென்று மேலாளரிடம் முறையிட்டுள்ளார். அங்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், தலைமை வங்கிக்குச் சென்று முறையிட்டுள்ளார். ஆனால், அங்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, காவல் நிலையத்தில் புகார் அளித்த போது சைபர் க்ரைமில் முறையிட சென்ற போது, அவர்கள் புகார் அளிக்க வடவள்ளி காவல் நிலையத்திற்கு செல்ல கூறியதாகவும், இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறி, ஆட்டோ ஓட்டுனர் ராதாகிருஷ்ணன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சமரசப்படுத்தி அமர வைத்தனர்.
பின்னர் அவரிடம் விசாரித்ததில், வங்கி அதிகாரிகள் தன்னை அலைக்கழித்து அவமானபடுத்தியதாலும், பணம் பறிபோனதாலும், மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், தனக்கு ஏதாவது நடந்தால் கனரா வங்கி மற்றும் இந்தியன் வங்கி மேலாளர்கள் தான் காரணம் என புகார் மனு எழுதிக் கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த போது தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.
தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுனர் ராதாகிருஷ்ணனனை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.