யானைகள் முகாமிட்டுள்ள பகுதியில், எஸ்டேட் நிர்வாகங்கள் தொழிலாளர்களை தேயிலை பறிக்க அனுமதிக்க கூடாது என்றும், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில், இரவு நேரத்தில் மக்கள் தனியாக நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் வனத்துறை அறுவுத்தியுள்ளது.
கோவை: வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள, வால்பாறையில், பருவமழைக்கு பின் வன வளம் பசுமையாக இருப்பதால், மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை, பன்னிமேடு வழியாக வரும் யானைகள், பல்வேறு எஸ்டேட்களில் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
இவ்வாறு எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட யானைகள், பகல் நேரத்தில் தண்ணீர் மற்றும் உணவு தேடி சாலைகளை கடப்பதும், சில நேரங்களில் தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பல நாட்கள் முகாமிடுவது அதிகரித்துள்ளது.
சமீபத்தில், வால்பாறை பகுதிகளில் அதிகரித்துள்ள யானை நடமாட்டம் குறித்து பேசிய வனத்துறை அதிகாரிகள், வால்பாறையில் பருவமழைக்கு பின், யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
பகல் நேரத்திலேயே யானைகள் சாலைகளை கடந்து செல்வதால், வாகன ஓட்டுனர்கள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும். குறிப்பாக, இரவு நேரங்களில் வாகனங்களை ஓட்டுபவர்கள், வாகன முகப்பு விளக்குகள் சரிபார்த்து விட்டு பயணத்தை தொடங்க வேண்டும்.
யானைகள் முகாமிட்டுள்ள பகுதியில், எஸ்டேட் நிர்வாகங்கள் தொழிலாளர்களை தேயிலை பறிக்க அனுமதிக்க கூடாது. யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், இரவு நேரத்தில் மக்கள் தனியாக நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் இரவு நேரத்தில் யானைகள் வந்தால், வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்
குறிப்பாக, யானைகள் முகாமிட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் செல்ஃபி எடுக்க செல்வது, யானைகள் மீது கற்கள் எரிவது, சத்தம் எழுப்புவது போன்ற சீண்டல்களில் ஈடுபட்டு வன உயிர்களைபொதுமக்கள் துன்புறுத்தக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.