ஓணம் பண்டிகை கொண்டாடிவிட்டு சென்றவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடையின் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை: குன்னூர் அருகே ஓணம் பண்டிகை கொண்டாடிவிட்டு சென்றவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடையின் மீது மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று 8ஆம் தேதி நாடு முழுவதும் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகையை ஓட்டி, நீண்ட விடுமுறையை நீலகிரியில் செலவிட ஏராளமானோர் வந்திருந்தனர்.
அதன்படி, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு ஒன்பது பேர் கொண்ட குழு நேற்று ஸ்கார்பியோ காரில் வந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் நீலகிரி, குன்னூர் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தனர் அவர்களது காரை சன்ஜித் (18) என்பவர் ஓட்டியுள்ளார்.
வாகனம் காட்டேரி அடுத்த கே.எம்.எப் பகுதியில் செல்லும் போது அதிவேகமாக சென்ற வாகனம் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர கடையில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வாகனத்தில் பயணித்த அனைவரும் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து உடனடியாக அங்கிருந்த மக்கள் அவர்களை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், பலத்த காயமடைந்த வாகனத்தை ஓட்டிய சன்ஜித் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயமடைந்த மற்றவர்கள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, குன்னூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓணம் பண்டிகைக்காக நீலகிரி வந்த வாலிபர் விபத்தில் பலியானது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மலைப்பகுதியில் வேகமாகவோ, வளைவுகளில் முந்தி செல்லவோ கூடாது என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டும், இது போன்று அதிவேகமாக செல்லும் வாகனங்கள் விபத்துள்ளாவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
குறிப்பாக, வெளி ஊர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு மலைப்பாதைகளின் தன்மை சரிவர தெரியாததால், விபத்துகளில் சிக்கி வருவது தொடர் கதையாகி வருகிறது.