கோவை மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தாங்கள் புறக்கணிப்படுவதாகவும், அரசு நிகழ்ச்சிகளில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு நடத்துவதாக மாவட்ட ஆட்சியரிடம் கோவை மாவட்ட அதிமுக எம்.எல்.ஏ க்கள் மனு அளித்துள்ளனர்.
கோவை: கோவையில் அரசு நிகழ்ச்சிகளுக்கு எம்.எல்.ஏக்களை அழைக்காமல் திமுக நிர்வாகிகள் பங்கேற்று நிகழ்ச்சிகளை நடத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன், கிணத்துக்கடவு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ தாமோதரன், வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கந்தசாமி மற்றும் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கந்தசாமி ஆகியோர் கோவை மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தாங்கள் புறக்கணிப்படுவதாகவும், அரசு நிகழ்ச்சிகளில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு நடத்துவதாக அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோல், திமுகவினர் மாநகராட்சி நிர்வாகம் கூறியதை மீறியும் பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளதாகவும், அதனை அகற்றவில்லையெனில் தாங்களும் ஒட்டுவோம் என தெரிவித்துள்ளனர்.
மேலும், கோவையில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா என சந்தேகம் எழுவதாகவும் கூறிய அவர்கள், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுவை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், அரசு திட்ட விழாக்களில் எங்களை அழைப்பதில்லை. இங்கு நடைபெறும் அரசு விழாக்களில் மாவட்ட நிர்வாக அழைப்பிதழ்களில் சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர் இருக்கிறது. ஆனால் எங்களை அழைப்பதில்லை.
உதாரணத்திற்கு மருதமலை கோவிலில் மண்டபம் கட்டும் பணிக்கான பூஜை நடத்தும் போது சட்டமன்ற உறுப்பினரையும் அப்பகுதி வார்டு கவுன்சிலர்(அதிமுக) அழைக்காமல் திமுக பகுதி செயலாளரை வைத்து அந்நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
அதேபோல, கிணத்துக்கடவு தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் அளிக்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினரை சில பள்ளிகளில் மட்டும் அழைக்கின்றனர். சில பள்ளிகளில் அழைக்காமலேயே நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். திமுக ஒன்றிய செயலாளரே அதனை வழங்கிவிட்டு நீங்கள் வர அவசியம் இல்லை என தெரிவிக்கின்றனர்.
இதுபோன்று சட்டமன்ற உறுப்பினர்களை அவமானப்படுத்துவது தான் திராவிட மாடலா?. எங்களது கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளோம். அவரும் பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.
மேலும், அவிநாசி சாலை மேம்பாலங்களில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளதற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கிறது. நாங்கள் போஸ்டர்கள் ஒட்ட சென்றால் போலீசார் எங்களை தடுக்கின்றனர். கோவையில் நடைபெறுவது திராவிட மாடல் ஆட்சியா என தெரியவில்லை. இங்கு அரசாங்கம் நடப்பதில்லை, கட்சி ஆட்சிதான் நடக்கிறது.
வெள்ளலூர் பேருந்து நிலையம் குறித்து எங்கள் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி செயல்படுவோம்.
அதிமுக பொதுக்குழு நடத்தியது செல்லும் என்ற தீர்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எங்களுக்கு நீதிமன்றத்தில் இருந்து மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. எடப்பாடியாரிடம் இது குறித்து தெரிவித்து விட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.