ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் வாரம் கடைபிடிக்கப்படும் தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு, கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கோவை: தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் வாரம் தேசிய ஊட்டச்சத்து வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த வாரத்தில், சமச்சீரான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் அவசியம் குறித்து பொதுமக்கள் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் தெரிந்து கொள்ளும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணியானது, வ.உ.சி மைதானத்தில் நிறைவடைந்தது.
பேரணியில், சுமார் 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டு ஊட்டச்சத்து வார விழாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், சத்தான உணவுகள் உட்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் பதாகைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.
மேலும், மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கும்மியாட்டம், ஒயிலாட்டம், போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
முன்னதாக, இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கொடியசைத்து துவக்கி வைக்க வருவதற்கு தாமதமானதால், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அங்கன்வாடி ஊழியர்கள் வெயில் தாங்க முடியாமல் குடைகளை பிடித்தவாறு ஆங்காங்கே அமர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.