காந்திபுரம் 48வது வார்டில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள நவீன அங்கன்வாடி மையத்திற்கான பூமி பூஜையில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
கோவை: திமுகவில் மாற்றுக் கட்சியினர் இணைவது போல திமுகவிலிருந்து பலரும் பாஜகவில் இணைந்து வருவதாக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
காந்திபுரம் 48வது வார்டில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 15 லட்சம் மதிப்பீட்டில் நவீன அங்கன்வாடி மையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற அங்கன்வாடி மையத்திற்கான பூமி பூஜையில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அங்கன்வாடி மையங்களுக்கு கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது தொகுதியில் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்குமாறு முதல்வர் தெரிவித்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரிடம் 10 முக்கிய கோரிக்கைகளை அளிக்க உள்ளேன்.
குறிப்பாக சமீபத்தில் பெய்த மழையினால் சேதம் அடைந்த பகுதிகளான லங்கா கார்னர் மற்றும் அவிநாசி மேம்பாலம் ஆகிய இடங்களை அதில் குறிப்பிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்காதது குறித்து பேசிய அவர், கட்சியின் தலைவராக ஸ்டாலின் வாழ்த்துக்களை கூறவில்லை என்றாலும் மாநிலத்தின் முதல்வராக அவர் வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்காமல் உள்ளார்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பாஜகவினர் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், திமுகவில் மாற்றுக் கட்சியினர் இணைவது போல எங்கள் கட்சியிலும் திமுகவிலிருந்து பலரும் இணைந்து வருவதாக தெரிவித்தார்.