அவிநாசி சாலையில் வைக்கப்பட்டிருந்த இந்து முன்னணி அமைப்பின் கொடிகள் அகற்றப்பட்டதை கண்டித்து விளம்பர கோபுரம் மீது ஏறி, இந்து முன்னணி நிர்வாகிகள் இருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலையில் வைக்கப்பட்டிருந்த இந்து முன்னணி அமைப்பின் கொடிகள் அகற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி நிர்வாகிகள் இருவர் விளம்பர கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொது இடங்களில் சிலைகளை வைக்க தமிழக அரசு தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இந்தாண்டு பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட எந்த விதமான தடையும் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் பிரம்மாண்டமான வண்ண வண்ணவிநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
அதன்படி, திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி நிர்வாகிகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல், திருப்பூர் மாநகரில் புஷ்பா சந்திப்பு, அவிநாசி ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் இந்து முன்னணி கட்சி கொடிகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், அவிநாசி ரோடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த இந்து முன்னணி கொடிகள் நேற்று இரவு அகற்றப்பட்டன. கொடி அகற்றப்பட்ட நிலையில், இதனை கண்ட இந்து முன்னணி பிரமுகர்கள், திருப்பூர் புஷ்பா சந்திப்பு பகுதியில் திரண்டனர்.
இதனை தொடர்ந்து, இந்து முன்னணி அமைப்பின்கொடிகளைஅகற்றியதற்கு கண்டனம் தெரிவித்தும், மீண்டும் அந்தப் பகுதியில் கொடிகளை வைக்க கோரியும் இந்து முன்னணி ஆட்டோ பிரிவு நகர தலைவர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த செல்வராஜ் மற்றும் இந்து முன்னணி நகர செயலாளர் காலேஜ் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரும் திருப்பூர் புஷ்பா மேம்பாலம் அருகே உள்ள சுமார் 70 அடி உள்ள தனியார் விளம்பர கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மீண்டும் அந்த பகுதியில் இந்து முன்னணி கட்சி கொடிகளை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததால், இருவரும் கீழே இறங்கி வந்தனர்.
கட்சி கொடி அகற்றப்பட்ட பிரச்சனைக்காக இந்து முன்னணி அமைப்பினர் 70 அடி உயரவிளம்பர கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.