சத்துணவு ஊழியருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சுமார் 50-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: ஓய்வு பெற்ற ஊழியருக்கு பணிக்கொடை ஐந்து லட்சம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், மாநில அளவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சுமார் 50-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"சத்துணவு ஊழியருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியருக்கு பணிக்கொடை ஐந்து லட்சம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தில் பணிபுரியும் அமைப்பாளர் சமையலர் உதவியாளர் மூலமாகவே காலை சிற்றுண்டி சமைத்து வழங்கிட உத்திரவிட வேண்டும்" ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கோவை மாவட்ட தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொருளாளர் நடராஜன், மாவட்ட செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அவர்கள், காலை சிற்றுண்டி திட்டம் தனியாருக்கு ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதனை மாற்றி சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், ஓரிரு மாதங்களில் சென்னையில் சத்துணவு சங்கத்தினர் இணைந்து பெரும் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.