விரைவில் ஓ.பி.எஸ் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக புரட்சிப் பயணம் மேற்கொள்ள உள்ளார். கோவையில் பத்தாயிரம் தொண்டர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஒரு பிரம்மாண்டமான செயல்வீரர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று செய்தியாளர் சந்திப்பின் போது பேசினார்.
கோவை: ஓ.பன்னீர்செல்வம் இல்லாவிட்டால், எடப்பாடி பழனிசாமி யார் என்று யாருக்கும் தெரிந்து இருக்காது. ஓ.பி.எஸ்-ஐ இழிவாக பேசுவதை எடப்பாடி பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளரான கோவை செல்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை பால் கம்பெனி பகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய, கோவை செல்வராஜ் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எடுத்துரைத்து வருகிறார்.
28 ஆண்டு காலம் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் பதவியை இனிமேல் தேர்ந்தெடுக்க கூடாது என சொல்லி ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உருவாக்கி கட்சியை வழி நடத்தி வந்தனர்.
ஆனால், இன்று தனது சுயநலத்திற்காக, 50 ஆண்டுகால திராவிட அரசியல் வரலாற்றில் 31 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்த அதிமுக கட்சியையும், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருடன் பணியாற்றிய முன்னாள் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கட்சியினுடைய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். வேண்டுகோளுக்கு இணங்க அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் என பலரும் அவருடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், இன்று ஒன்றிய, நகர செயலாளர்கள் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், தொண்டர்களை சந்தித்து வருகிறார்.
கோவை மாவட்டம் உட்பட தமிழ்நாடு முழுவதும் எல்லா ஊர்களிலும் இருந்து வரும் அதிமுக தொண்டர்கள் கடந்த 4 நாட்களாக ஓபிஎஸ் வேண்டுகோள் தான் நியாயமானது என கூறி வருகின்றனர்.
கட்சியை, ஒரு கம்பெனியை போல் நடத்த எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முயற்சித்து வருகிறார். இந்த கட்சியை ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் இருக்கும் வரை எந்த சக்தியாலும் எந்த கொம்பனாலும் கையகப்படுத்த முடியாது.
பதவிக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு வெறித்தனமாக செயல்படுகிற எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட ஒரு சிலரைத் தவிர மற்ற அனைத்து தொண்டர்களும் நிர்வாகிகளும் இன்றைக்கு கட்சியை காப்பாற்ற வேண்டும் என அமைதியாக மௌனம் காத்து வருகிறார்கள். ஏராளமான தொண்டர்கள் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓபிஎஸ்-ஐ சந்தித்து வருகிறார்கள்.
விரைவில் கோவையில் பத்தாயிரம் தொண்டர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஒரு பிரம்மாண்டமான செயல்வீரர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த செப்டம்பர் மாதத்தில் அது நடத்தப்படும்.
இன்றைய சூழ்நிலையில் சசிகலா, தினகரன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சொன்ன கருத்தை முழுமனதோடு ஏற்று இருக்கிறார்கள். அம்மாவால் அடையாளம் காணப்பட்டு இரண்டு முறை முதலமைச்சராகவும் அம்மா மறைவுக்கு பிறகு முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் மீது மக்களும் தொண்டர்களும் அபரிதமான நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
ஓ.பி.எஸ் விரைவில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக புரட்சி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இவ்வாறு கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.