மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை , மின்சார சட்ட திருத்த மசோதா, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியதால், பின்னலாடை நலிவடைந்ததாக இந்திய கம்யூ. கட்சியினர் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டின் முடிவின்படி, மத்திய அரசை கண்டிக்கும் வகையில் இன்று (30.08.2022) மாநிலம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
திருப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், மத்திய அரசின்தவறான பொருளாதார கொள்கையால் மக்கள் மற்றும் தொழில்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
அதேபோல, திருப்பூர் பின்னலாடை தொழில் நலிவடைந்ததற்கு மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதா மற்றும் நூல் விலை உயர்வே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இவற்றை கண்டிக்கும் விதமாக, ஆகஸ்ட் 30 ஆம் தேதி மாநிலம் தழுவிய கண்டன போராட்டம் நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி,திருப்பூர் மாநகரில் புதூர் பிரிவு , காமராஜர் சாலைஉள்ளிட்ட 12 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதில், காமராஜர் சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் எம்.கே.எம் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டார்.

இந்த போராட்டத்தில், ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
