கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய அவகாசம் குறைவாக உள்ளதால், அனைத்து முக்கிய கூட்டுறவு சங்கங்களின் மூலமாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் எம்.எல். ஏ பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தல்.
கோவை: கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலை ஒரு கிலோவிற்கு 105.90 ல் இருந்து 150 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கான தொகையினை வாரம் ஒரு முறை காசோலை மூலம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன்,கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.
அவர் அளித்த மனுவில், மார்க்கெட்டில் தேங்காய் மற்றும் கொப்பரை விலை உயரும் வகையில் தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும்.
கொப்பரை கொள்முதல் செய்ய ஒரு மாத காலம் தான் அவகாசம் உள்ளதால், தற்போது நடைமுறையில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் மட்டுமே கொள்முதலை செய்யாமல் கடந்த காலங்களைப் போல் அனைத்து முக்கியமான கூட்டுறவு சங்கங்களின் மூலமாகவும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல, கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கான தொகையை வாரம் ஒரு முறை காசோலை மூலம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திற்கும் தனியாக USER ID வழங்க வேண்டும்.
மேலும், கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை ஒரு கிலோவிற்கு 105.90-ல் இருந்து 150 ஆக உயர்த்தி வழங்கிட ஆவண செய்ய வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.