கோவை மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (29) என்ற பொறியியல் பட்டதாரி, கத்தியால் குத்திய காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். தாய் உட்பட 5 பேரிடம் போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை மாச்சம்பாளையம் பகுதியில் கத்தியால் குத்திய காயங்களுடன் இளைஞர் சடலமாக மீட்ட நிலையில்தாய் உட்பட 5 பேரிடம் போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (29). பொறியியல் பட்டதாரி. போதைக்கு அடிமையான இவர் பணிக்கு செல்லாமல் கடந்த 5 ஆண்டுகளாக சுற்றி வந்ததாக தெரிகிறது. தாய்மாமன் வீட்டில் தங்கியிருந்த செந்தில்குமார், அடிக்கடி தனது தாய் பாப்பாத்தியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், இன்று மதியம் செந்தில்குமார் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அங்கிருந்தவர்கள் சென்று பார்த்த போது, கழுத்து மற்றும் உடலில் பல்வேறு பகுதிகளில் வெட்டுக் காயத்துடன் செந்தில்குமார் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து, அவர்கள் போத்தனூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், செந்தில்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக பாப்பத்தி (தாய்), சீனிவாசன் (மாமா), ராணி (சித்தி) உட்பட 5 உறவினர்களிடம்போலீசார் தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.