சிம்மக்குரல் கலைக்குழுவினரால் பயிற்சி அளிக்கப்பட்ட ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா, கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் கோலாகலமாக நடைபெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என நூற்றுக்கணக்கானோர் நயத்துடன் உற்சாக நடனம் ஆடி அசத்தினர்.
கோவை: கோவையில் நடைபெற்ற ஒயிலாட்டம் அரங்கேற்றத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என நூற்றுக்கணக்கானோர் வண்ண ஆடைகளுடன், நயத்துடன்உற்சாக நடனம் ஆடி அசத்தினர்.
கோவையை சேர்ந்த சிம்மக்குரல்கலைக்குழு சார்பில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம், கும்மியாட்டம், காவடியாட்டம், வள்ளி கும்மி ஆகிய கலைகள் இலவசமாக கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் வாழ்பவர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த இந்த பாரம்பரிய கலைகளை தற்போது உள்ள இளம் தலைமுறையினர் உட்பட அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் கற்று வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வாறு
பயிற்சி பெற்ற ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழாவானது, கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் கோலாகலமாக நடைபெற்றது.
திறந்த வெளி மைதானத்தில், பாரம்பரிய கலைகள் குறித்து இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நடைபெற்ற இந்த விழாவில், சிம்மக்குரல் ஒயிலாட்ட கலைக்குழுவினரின் நாட்டுப்புற பாடல்கள், ஒயிலாட்ட சீர் வரிசையுடன், வண்ண ஆடைகளுடன், கோலமிட்ட மைதானத்தில்,நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் வயது வித்தியாசமின்றி இணைந்து ஆடினர்.
பம்பை இசை முழங்கமுளைப்பாரி எடுத்து ஒயிலாட்டம் அரங்கேற்றம் பிரமாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில், குதிரைகள், காளைகள் பங்குபெற்றத்துடன் அதிக கலைஞர்கள் இணைந்து தொடர்ந்து நான்கு மணி நேரம் ஆடிய இந்த ஒயிலாட்ட அரங்கேற்ற விழா காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கௌமார மடாதிபதி சிரவை ஆதினம் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள் சிறப்புரையாற்றி பாரம்பரிய கலைகளை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை பற்றி பேசி, கலைஞர்களை வாழ்த்தினார்.
சிம்மக்குரல் ஒயிலாட்ட கலைக்குழுவினரின் இந்த அரங்கேற்ற நிகழ்ச்சி நோபல் உலக சாதனை (Nobel World Records) புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.