முறையான திட்டமிடல் இன்றி வெள்ளலூர் தரைப்பாலம் அமைக்கப்பட்டதால், அடிக்கடி நீரில் அடித்துச் செல்லப்படுவதும், சீரமைப்பதும் அரங்கேறுவதால், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக, பொதுமக்கள் குற்றச்சாட்டு.
கோவை: கோவையில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்ததால், பல்வேறு பிரதான சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில், கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கோவை மாநகராட்சியுடன் புறநகர் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலைகளில் ஒன்றான வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் உள்ள தற்காலிக தரைப்பாலம் மீண்டும் வெள்ளத்தில் அடித்துச் சென்றது.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களில் இந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், அந்த பாதையில், போக்குவரத்து மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.
நொய்யல் ஆற்றின் மீது உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இரண்டு முறை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும் மூன்றாவது முறையாக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அந்தச் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றி மாநகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முறையான திட்டமிடல் இல்லாமல் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்படுவதால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதும், மீண்டும் சீரமைப்பதும் என தொடர்ந்து செய்வதால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.