லங்கா கார்னர் உள்ளிட்ட பல்வேறு சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள நீரை மோட்டார்கள் மூலம் அகற்றும் பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வின் போது உத்தரவிட்டார்.
கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 3 மணி நேரம் நீடித்த தொடர் மழையால், அவினாசி சாலை, திருச்சி சாலை, சுந்தராபுரம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் அனைத்து சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
கனமழை காரணமாக ரயில்வே நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர், கிக்கானி பள்ளி, அவினாசி சாலை உள்ளிட்ட முக்கிய சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கியது. இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், லங்கா கார்னர் சுரங்கப்பாதையில் அதிகாலையில்கார் ஒன்று சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக அந்த காரை வெளியே எடுத்தனர்.
இதையடுத்து, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் துணை ஆணையாளர் சர்மிளா ஆகியோர் கிக்கானி, லங்கா கார்னர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சுரங்கப்பாதையில் தேங்கிய நீரை மோட்டார்கள் மூலம் அகற்றும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.
இதையடுத்து ராட்சதமோட்டார்கள் மூலம் சுரங்க பாதையில் இருந்த நீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மழை நீர் சூழுந்துள்ள பகுதிகள் கோவையின் மைய பகுதிகள் என்பதால் மக்கள் பெரும் அவதிகுள்ளகினர். வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன்பாவது, இப்பகுதிகளில் உள்ள மழை நீர் வடிகால்களை தூர்வாரி மழை நீர் அதிக நேரம் தேங்காத படிநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.