கோவை குனியமுத்தூரில் இயங்கி வரும் ஐ.சி.எல் ஃபின்கார்ப் நிறுவனத்தில் ஊழியர்களே போலி நகைகளை அடகு வைத்து மோசடி - முக்கிய குற்றவாளி கைது

மோசடியில் ஈடுபட்ட வழக்கில், பதுங்கி இருந்த வழக்கின் முதன்மை குற்றவாளியான கார்த்திகாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மூன்றாவது நபரான சரவணகுமார் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.



கோவை: வங்கி, நிதி நிறுவனங்கள் போன்றவற்றை நடத்துபவர்களுக்கு தலைவலியாக இருப்பவர்கள் முகமூடி கொள்ளையர்கள் தான் என்ற காலம் போய், கொள்ளையர்களுக்கே சவால் விடும் அளவுக்கு நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களே நூதன கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன.

கோவை குனியமுத்தூர் பகுதியில் கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஐ.சி.எல் ஃபின்கார்ப் (ICL Fincorp) என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்து வட்டிக்கு பணம் தந்து வருகின்றனர்.

குனியமுத்தூரில் உள்ள அந்த நிதி நிறுவன கிளையில் தலைவராக கார்த்திகா, மேனேஜராக சரவணகுமார் மற்றும் நிதி நிறுவன கிளையின் துணை தலைவராக சத்யா ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த நிறுவனத்தில் வருடாந்திர தணிக்கை நடத்தப்பட்ட போது, தங்க நகைகள் இருப்பு மற்றும் அவற்றின் எடை என கணக்குகளை சரி பார்த்துள்ளனர். அப்போது, நகைகளின் எடையில் மாற்றம் இருப்பதை சந்தேகித்த தணிக்கை குழு மற்றும் நகை மதிப்பீட்டு முழு அதிகாரிகள், கணக்குகளை ஆய்வு செய்து பார்த்தபோது லாக்கரில் போலி நகைகள் வைத்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து, உடனடியாக நிறுவன கிளையின் தலைமை அதிகாரி மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, குனியமுத்தூர் கிளை தலைவரான கார்த்திகா, மேனேஜராக இருந்த சரவணகுமார், நிதி நிறுவன கிளையின் துணை தலைவராக இருந்த சத்யா ஆகியோர் கூட்டு சேர்ந்து சதி செய்தது அம்பலமானது.

தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மூவரும் ஏற்கனவே, கிளையில் வரவு செலவு வைத்திருக்கின்ற வாடிக்கையாளர்கள், அவர்களது உறவினர்கள் என 10-க்கும் மேற்பட்டோரின் ஆவணங்களை பயன்படுத்தி போலி கையொப்பமிட்டு பலே மோசடியில் ஈடுபட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது

அதாவது, அரை கிலோ போலி நகைகளை 25 பொட்டலங்களாக அடகு வைத்து வாடிக்கையாளர்களுக்கு கடன் தந்தது போல கணக்கு காட்டி, 26 லட்சம் ரூபாயை நூதனமாக கொள்ளையடித்து உள்ளனர்.

மேலும், நிதி நிறுவனத்தில் பணத்தை கொள்ளையடித்தது மட்டுமில்லாமல், வாடிக்கையாளர்களால் அடகு வைக்கப்பட்ட 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான 227 கிராம் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு, போலி நகைகளை லாக்கரில் வைத்து அடகு நகையாக கணக்கு காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, கடந்த மே மாதம் நிதி நிறுவனம் சார்பில் கோவை குற்றவியல் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூலை 30 ஆம் தேதி முதல் குற்ற அறிக்கை (FIR) தாக்கல் செய்யப்பட்ட நிலையில், காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், உதவி ஆணையாளர் பார்த்திபன் மேற்பார்வையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார், மேற்கொண்ட திவீர விசாரணையில், குற்றவாளிகளில் ஒருவரான சத்யா, கடந்த 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, போலி நகைகளை பறிமுதல் செய்த தனிப்படையினர், தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் வழக்கின் முதன்மை குற்றவாளியான கார்த்திகாவை குறித்து போலீசாருக்கு துப்பு கிடைத்தது.

அதன்படி, நேற்று கடந்த 25 ஆம் தேதி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பதுங்கி இருந்த வழக்கின் முதன்மை குற்றவாளியான கார்த்திகாவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்றாவது நபரான சரவணகுமார் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

போலி நகைகளை அடகு வைத்தும், ஒரிஜினல் தங்க நகைகளை கொள்ளையடித்து லட்சக்கணக்கில் மோசடி செய்த இந்த கும்பல் சொகுசு வாழ்க்கைக்காகவும், மருத்துவ செலவுக்காகவும் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இது போன்ற குற்றங்கள் நிகழ்வதை பார்க்கும் போது, தனியார் நிதி நிறுவனங்களை நம்பி நகைகளை எப்படி அடகு வைப்பது என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...