வெள்ளலூர் பேருந்து நிலையம் கட்டப்பட்டது மாநில அரசு நிதியில் அல்ல. மாநகராட்சி நிதிகளை எடுத்து வெள்ளலூர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு தினமும் ஒரு அறிக்கை கொடுக்க வேண்டும் போல் இருக்கிறது, என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்தார்.
கோவை: திருப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் கோவை விமான நிலையம் எதிரில் உள்ள கயிறு வணிக மேம்பாட்டு வாரிய அலுவலக கட்டிடத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில், மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மேற்கு மாவட்ட மக்களின் கோரிக்கையை சட்டமன்றத்தில் அறிவித்து கயிறு மேம்பாட்டு வணிக கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்துள்ளார். இதற்காக, முதலமைச்சருக்கு கோவை மாவட்ட மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல தனியார் தொழிற்பேட்டைக்கு 18 கோடி மதிப்பீட்டிலும், தொழிலாளர்கள் தங்குவதற்கு 22 கோடி மதிப்பீட்டிலும் முதல்வர் திட்டங்களை வழங்கியுள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் நடைமுறைகளுக்கு கொண்டு வரப்படுவதில்லை என தெரிவித்த அவர், அடுத்த கட்டமாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக, ஒழுங்குமுறை ஆணையத்தில் உள்ள உறுப்பினர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கர் மதிப்பில் தென்னை விவசாயம் செய்யும் விவசாயிகள் உள்ளனர். இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதால் வரும் நாட்களில் ஒரு லட்சம் ஏக்கரை கடந்து விவசாய பெருமக்களின் உற்பத்தியை அதிகரிக்க கூடிய அளவில் வாழ்வாதாரம் மேம்படக்கூடிய வகையிலான சிறப்பு வாய்ந்த திட்டத்தை முதல்வர் துவங்கி வைத்துள்ளார். இந்த திட்டம் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டிருந்த திட்டம்.
வால்பாறை சட்டமன்ற உறுப்பினரின் வீடியோ குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அவர்களின் இருப்பை காட்டுவது போல் நீங்கள் செயல்பட வேண்டாம். சில பேருக்கு விளம்பரத்தை தேடி தர வேண்டாம் என்றார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியில் ஏற்கனவே வழங்கப்பட்ட பயனாளிகளை மீண்டும் அழைத்து வந்து திமுக நலத்திட்டங்கள் வழங்கியதாக விமர்சனம் செய்தது தொடர்பான கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர், அப்போது, கொடுக்கப்பட்ட பயனாளிகள் என்றால் ஒன்றே கால் வருடம் கழித்து எப்படி வருவார்கள், ஒரு லட்சத்து ஏழாயிரம் பயனாளிகளுக்கு, அதிமுக ஆட்சியில் வழங்க முடியாததை 15 மாதத்தில் முதல்வர் வழங்கியுள்ளார்.
இந்த பட்டியல் கடந்த 3, 4 மாதமாக தயாரிக்கப்பட்டது. ஐந்தாண்டு காலத்தில் 50 ஆண்டு கால வளர்ச்சி என விளம்பரப் படுத்துகிறார்கள், அப்படி வளர்ச்சி அடைந்திருந்தால் ஏன் கோவை முழுவதும் உள்ள சாலைகள் பழுதடைந்துள்ளது?.
அதிமுகவினர் திட்டங்களை செயல்படுத்தி இருந்தால் மக்கள் சபை நிகழ்ச்சிகளில் ஒரு லட்சத்து 41 ஆயிரம் மனுக்கள் வருவது ஏன்?
வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் அரசு நிதி எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது? எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது? எவ்வளவு செலவழிக்கப்பட்டு உள்ளது? என்பதை எடப்பாடி பழனிசாமி முதலில் தெரிவிக்கட்டும். பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லட்டும்.
வெள்ளலூர் பேருந்து நிலையம் கட்டப்பட்டது மாநில அரசு நிதியில் இல்லை. மாநகராட்சி நிதிகளை எடுத்து வெள்ளலூர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு தினமும் ஒரு அறிக்கை கொடுக்க வேண்டும் போல் இருக்கிறது.
வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து பேட்டி கொடுத்து விட்டு மீண்டும் வீட்டுக்குள் போகும் அரசு அல்ல இந்த அரசு, என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்தார்.