ஈச்சனாரி பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், 5 ஆண்டுகளில் அளப்பறிய திட்டங்களை நிறைவேற்றி தமிழ்நாட்டை இந்தியாவிலேயே வளம் கொண்ட மாநிலமாக மாற்றுவதே திட்டம் என அறிவித்தார். மேலும், தமிழகத்திற்கு குந்தகம் விளைவிக்க நினைத்தால் அனுமதிக்க மாட்டேன் என்றும் கூறினார்.
கோவை: ஈச்சனாரி பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
முடிவுற்ற பல்வேறு பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.
மேலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து சிறப்புரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து 15 மாதங்களில் ஐந்தாவது முறையாக கோவைக்கு வந்துள்ளேன். இந்த மாவட்டத்தின் மீதும் மாவட்ட மக்களின் மீதும் நான் வைத்துள்ள அன்பின் அடையாளம் இது.
தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருப்பதை அரசு விழா என சொல்வதை விட கோவை மாநாடு என்று சொல்லலாம். எதிர்கால தேர்தல் முடிவுகளை உங்கள் (மக்கள்) முகங்களின் மூலம் பார்க்கிறேன்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பாக செயல்பட்டு வருகிறார், அவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. அவருடன் இணைந்து மாவட்ட ஆட்சித் தலைவரும் சிறப்பாக செயல்படுகிறார். கோவையில் இந்த விழா நடத்துவது பொருத்தமானது, ஏனென்றால் கோவை என்றாலே பிரமாண்டம் தானே.
கோவை மாவட்டத்தில் உள்ள தொழில்களை கணக்கிட்டால் அடுக்கிக் கொண்டு போகலாம். தொழில் வளம் கொண்ட மாவட்டம் கோவை மாவட்டம்.
இன்றைய தினம் அனைத்து துறைகளின் சார்பிலும் பிரம்மாண்டமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. என்ன செய்தோம், என்ன செய்தோம் என்று கேட்பவர்களுக்கு நான் நெஞ்சு தட்டி சொல்கிறேன் இது தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.
மக்களுக்காக இந்த அரசு செயல்படுகிறது, கணக்கிட முடியாத திட்டங்களை செய்வதுதான் இந்த அரசு. கோவை மாவட்டத்தில் கோவை பன்னாட்டு விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.1,510 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் சாலைகளுக்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் மத்திய சிறைச்சாலை இருக்கின்ற இடத்தில் ரூ.200 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா அமைய உள்ளது. கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெல்லி சென்ற பொழுது குடியரசுத் தலைவரும், துணைக் குடியரசுத் தலைவரும் தமிழக வளர்ச்சியை பற்றி கேட்டனர். அவர்களிடம் இது ஒரு நாளில் நடந்தது அல்ல... அடித்தளத்தில் பெரியார் - அண்ணா - கலைஞர் ஆகியோர்களின் செயல்பாடுகளால் நடந்தது என நான் கூறினேன்
தமிழ் மக்கள் வாழ்வு இனிதாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அரசு செயல்படுகிறது. பல்வேறு மாநில அரசுகளும் தமிழக அரசின் செயல்பாடுகளை கண்காணித்து இங்குள்ள திட்டங்களை அவர்களது மாநிலத்தில் செயல்படுத்தி வருகின்றன. இங்குள்ள சிலரால் அதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனைப் புரிந்து கொள்ளாமல் பேட்டி மட்டும் கொடுத்துவிட்டு சென்று விடுகின்றனர். நான் அவர்களின் பேட்டிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தை அனைத்து தொகுதிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்கள் தொகுதிகளுக்கான திட்டங்களை கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் முக்கியமான பத்து கோரிக்கைகளை பட்டியலிட்டு அந்த பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கலாம். இது எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம்.
விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளிலுள்ளவர்களின் பாராட்டுகள் எனக்கு தேவையில்லை, மக்களின் பாராட்டுகள் போதும், மக்களின் சிரிப்பில் தான் இறைவனை, அண்ணாவை, கலைஞரை காண்கிறேன்.
நான் விமர்சனங்களிலாலேயே வளர்ந்தவன், என்னை எதிர்த்தால் நான் துடிப்புடன் பணியாற்றுவேன். தமிழகத்திற்கு குந்தகம் விளைவிக்க எண்ணினால் ஒருபோதும் அதனை அனுமதிக்க மாட்டேன்.
அதிமுகவினர் சொந்த கட்சிக்குள் நடக்கும் அதிகார போட்டியில் கையாளாகாத தனத்தை மறைப்பதற்காகவும் திசை திருப்பும் நோக்கத்தோடும் திமுக மீது விமர்சனம் செய்கின்றனர். அவர்களுக்கு திமுகவை விமர்சிக்கும் தகுதியோ யோகிதையோ கிஞ்சி அளவும் கிடையாது.
ஒரு வருடத்தில் இவ்வளவு திட்டங்கள் செய்துள்ள நிலையில் ஐந்தாண்டுகளில் அளப்பரிய திட்டங்களை நிறைவேற்றி இந்தியாவிலேயே வளம் கொண்ட மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே திமுக அரசின் திட்டம். இத்திட்டத்தை அறிவிக்கும் மாநாடு தான் இது.
இது உங்களுக்கான அரசு எனவும் உரிமையோடு கோரிக்கையை வையுங்கள். தமிழ்நாட்டு மக்கள் இந்த அரசுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.