தடாகம் சாலையில் உள்ள கே.என்.ஜி புதூர் - மேட்டுப்பாளையம் இடையே உள்ள சாலையில் இயங்கி வரும் தனியார் மதுபான கூடத்தை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி ஊர் பொதுமக்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: தடாகம் சாலையில் கே.என்.ஜி புதூர் -மேட்டுப்பாளையம் இடையே உள்ள சாலையில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தனியார் மதுபான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி கே.என்.ஜி புதூர், எம்.ஜி.ஆர் நகர் ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மதுபான கடையால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பெண்கள், பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகவும், இதனால், அந்த மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து பேசிய போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், அரசுக்கு மதுபான கடை முக்கியமா அல்லது மக்களின் நலன் முக்கியமா என கேள்வி எழுப்பினர். இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.