சூலூர் அருகே இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞர் ஒருவர், இருசக்கர வாகனத்தை பழுது பார்ப்பதற்காக அதன் உரிமையாளரிடமே வந்து உதவி கேட்டுள்ளார். திருடனை உரிமையாளர் மடக்கி பிடித்த நிலையில் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை: சூலூர் அருகே இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு உரிமையாளரிடமே உதவி கேட்ட திருடனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
சூலூர் அருகேயுள்ள ராவுத்தூர் நெய்காரக்குட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன். கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பொறுப்பாளராக பணியாற்றி வரு இவர், வீட்டின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென அந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதாக தெரிகிறது. இதுகுறித்து அவர், கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்தார். குரும்ப பாளையம் வழியாகச் சென்றபோது ஒரு கடை முன்பு திருடுபோன தனது இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது.
வண்டியின் பக்கத்தில் நின்றிருந்த திருடன், முருகனிடமே வந்து தனது வாகனம் ரிப்பேர் ஆகி விட்டது, ஒர்க்ஷாப் எப்போது திறப்பார்கள் என்று கேட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த முருகன், தனது இரு சக்கர வாகனத்தையே திருடி வந்து விட்டு தன்னிடமே உதவி கேட்ட நபரை மடக்கி பிடித்துள்ளார்.
2 பேரும் தகராறில் ஈடுபடுவதை கண்டு அங்கு திரண்ட பொதுமக்கள், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தகவலின் பேரில் வந்த சூலூர் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தொட்டிப்பாளையத்தைச் சேர்ந்த பாலு என்ற பாலசுப்பிரமணியன் (30) என்பதும் அவர் மீது ஏற்கனவே பீளமேடு, சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 18 வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது. ஆனால், தற்போது நடைபெற்ற திருட்டு வழக்கில், FIR இன்னும் பதியப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பைக்கை திருடியதும் இல்லாமல், பைக் உரிமையாளரிடமே ரிப்பேர் செய்ய உதவி கேட்ட சுவாரசியமான சம்பவத்தை பலரும் சமூக வலயத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.