நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டே நெய்க்காரப்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கஞ்சாவை வாங்கி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை: கோவை அவிநாசி சாலை, நவ இந்தியா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த 5 இளைஞர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.
பின்னர், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள், திருப்பூர் காந்திநகர் 2வது தெருவை சேர்ந்த சூர்யா (21), பிச்சம்பாளையம் புதூரை சேர்ந்த கவியரசு (19), மனோஜ்குமார் (19), இளையபாரதி (19) மற்றும் அவிநாசி காசி கவுண்டன்புதூரை சேர்ந்த அரவிந்த் (19) என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் அனைவரும் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவதும், வெளியே அறை எடுத்து தங்கியிருந்து நெய்க்காரப்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கஞ்சாவை வாங்கி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.