வரும் 23 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வருவதை அடுத்து, வரவேற்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், காளப்பட்டியில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கோவை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 23ஆம் தேதி மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வர உள்ளார்.
இந்நிலையில், கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை வருகை தரும் தமிழக முதல்வருக்கு, வழி நெடுங்கிலும் சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை காளப்பட்டியில் இன்று நடைபெற்றது.
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கோவை விமான நிலையம் முதல் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் வரை தமிழக முதல்வர் செல்லும் பாதை முழுவதும், மாவட்ட வாரியாக நிர்வாகிகள், தொண்டர்கள் ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் உற்சாக வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் - முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், சிஆர்.இராமச்சந்திரன், மருதமலை சேனாதிபதி, டாக்டர்.வரதராஜன், முன்னாள் எம்பி நாகராஜ் மற்றும் பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முதல்வர் வருகை
ஆகஸ்ட் 23 ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் வரவுள்ளார். அன்று இரவு, விருந்தினர் மாளிகையில் முதல்வர் ஓய்வு எடுப்பார்.
ஆகஸ்ட் 24 காலையில் ஈச்சனாரி ரத்தினம் கல்லூரி அருகே நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு 82 பயனாளிகளுக்ககு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார்.
ஆகஸ்ட் 24 மாலை பொள்ளாச்சியில் நடைபெறவுள்ள திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். அந்த கூட்டத்தில், பல்வேறு கட்சியை சேர்ந்த 50,000 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைய உள்ளனர்.
ஆகஸ்ட் 25 திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்ள உள்ளார்.
ஆகஸ்ட் 26 கோவை பிஎஸ்ஜி கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொள்வார். பின் அன்று மாலையே விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார்.