கோவை சுந்தராபுரம் பகுதி மாச்சம்பாளையத்தில், ஒருவரது வீட்டில் தேசியக்கொடி இறக்கப்படாமலும், அதனோடு, தேசிய கொடியின் கீழ் "இயேசுவே என் இந்தியாவை ஆசீர்வதியும்" என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. 75 சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக 13ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதி மூன்று நாட்களில் அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி கொண்டாடுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி, நாடு முழுவதும் பல்வேறு வீடுகளில் தேசியக் கொடியானது ஏற்றப்பட்டு இருந்தது. 15ஆம் தேதி மாலை அனைவரும் தேசிய கொடியை இறக்கிய நிலையில், கோவை சுந்தராபுரம் பகுதி மாச்சம்பாளையத்தில், சண்முகம் என்பவரது வீட்டில் தேசியக்கொடி இறக்கப்படாமல் இன்னும் பறக்கவிட்டபடி உள்ளது.
அதனோடு, தேசிய கொடியின் கீழ் "இயேசுவே என் இந்தியாவை ஆசீர்வதியும்" என்ற வாசகமும் எழுதப்பட்டு தேசிய கொடியானது பறக்க விட்டபடி இருக்கிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
மேலும், தேசிய கொடியில் இதுபோல வாசகங்கள் எழுவதும், சுதந்திர தினம் முடிந்தும் கொடியை பறக்கவிடுவதும், தேசிய கொடியை அவமதிக்கும் செயல் என்றும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.