திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த சினிமா ஸ்டண்ட் மாஸ்டரும், இந்து முன்னணி இலக்கிய பிரிவு செயலாளருமான கனல் கண்ணன் நேற்று கைது செய்யப்பட்டார்.
கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய காடேஸ்வர சுப்ரமணியம், கனல் கண்ணனின் கருத்தை இந்து முன்னணி முழுமையாக வரவேற்பதாக தெரிவித்தார். மேலும், கனல் கண்ணன் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமல்லாமல் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இந்து முன்னணி மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.