தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வில் இருந்து குடிசைத் தொழில் மற்றும் குறுந்தொழில்களுக்கு முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும் என கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
"கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு, மூலப்பொருள் விலை ஏற்றம், பொருளாதார மந்த நிலை மற்றும் சந்தை நிலையின்மை ஆகியவற்றால் கடுமையாக பாகிக்கப்பட்டு, மிகுந்த நெருக்கடியை சந்தித்து வரும் தொழில் முனைவோர்கள் மின்கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுவர்" - சி. சிவகுமார், தலைவர், காட்மா.
கோவை: சமீபத்தில் தமிழக அரசு மின் கட்டண விலையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வருவதாக அறிவித்தது. அரசின் இந்த அறிவிப்புக்கு சிறு, குறு தொழில் முனைவோர் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வந்தன.
இந்நிலையில், மின்கட்டண உயர்வால் குடிசைத் தொழில் மற்றும் குறுந்தொழில்கள் பெரிதும் பாதிக்கப்படும் என்பதால் அரசு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) சார்பில் தமிழக மின்சார ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுந்தொழிற்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் படித்த மற்றும் படிக்காத 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த குறுந்தொழிற்கூடங்கள் தமிழ்நாடு மின்சார வாரியம் அளிக்கின்ற மின்சாரத்தையே 100 சதவீதம் நம்பி இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது, உத்தேச மின் கட்டண உயர்வை, தமிழ்நாடு மின்சார ஓழுங்குமுறை ஆணையத்திற்கு பரிந்துரை செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதன் அடிப்படையில், ஒரு யூனிட் மின் உபயோக கட்டணம் ரூ.6.35 லிருந்து ரூ.7.50 ஆக அதிகரிக்கப்படும் எனவும், 1 முதல் 50 கிலோவாட் மின் இணைப்பிற்கான நிலை கட்டணம் ரூ.35.00 லிருந்து ரூ.100.00 ஆகவும், 51 கிலோவாட்டில் இருந்து 100 கிலோவாட்டிற்கான நிலை கட்டணம் ரூ.35.00 லிருந்து ரூ.325.00 ஆகவும், 100 கிலோவாட்டில் இருந்து 112 கிலோ வாட் மற்றும் அதற்கு மேலான நிலை கட்டணம் ரூ.35.00 லிருந்து ரூ.600.00 ஆகவும் அதிகரிக்கப்படும், மற்றும் உச்சபட்ச மின் பயன்பாட்டு நேரத்திற்கான (Peak Hours Charge) மின் உபயோக கட்டணம் 25 சதவீதம் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு, மூலப்பொருள் விலை ஏற்றம், பொருளாதார மந்த நிலை மற்றும் சந்தை நிலையின்மை ஆகியவற்றால் கடுமையாக பாகிக்கப்பட்டு, மிகுந்த நெருக்கடியை சந்தித்து வரும் தொழில் முனைவோர்களை இந்த அறிவிப்பு மேலும் நெருக்கடியில் தள்ளுவதாக அமைந்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தற்போதைய நிதி நிலையை கருத்திற்கொண்டு, ஒரு யூனிட்டிற்கான மின் பயன்பாட்டு கட்டணம் உயர்த்தப்படுவதாக உள்ள அறிவிப்பு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும், பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள நிலை கட்டணம் மற்றும் உச்சபட்ச மின் பயன்பாட்டு நேர கட்டணம் ஆகியவை தொழில்துறையை மிகுந்த பின்னடைவை சந்திக்கும் நிலைமைக்கு தள்ளிவிடும்.
திறன்மிகு, அனுபவம் உள்ள வேலையாட்களை வைத்து தங்கள் நிறுவனத்தை இயக்கி வரும் ஒரு நிறுவனம், ஒரு நாளில் தொடர்ந்து தங்களது வேலை ஆட்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் உச்சபட்ச மின் பயன்பாட்டு நேரத்தினை விலக்கி திறன்மிகு வேலையாட்களுக்கு வேலை கொடுத்தால் திறன்மிகு வேலையாட்களை இழக்க நேரிடும்.
வேலை ஆட்கள் இல்லாமல் நிறுவனம் தொடர்ந்து தங்கள் தொழிலை நடத்த மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். மேலும், உச்சபட்ச மின் பயன்பாட்டு நேரத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு, தொழில் முனைவோர் தங்கள் வாடிக்கையாளரிடம் இருந்து கூடுதல் கட்டணம் பெறவும் இயலாது.
மேலும், கோவையில், ஒரு இடத்தில், ஒரு மின் இணைப்பு மட்டும் பெற்று அதன் மூலம் பல குடிசைத் தொழில் கூடங்கள் வாடகைக்கு இயங்கி வருகின்றன. இதுபோன்ற குடிசைத் தொழிற்கூடங்களை, நிலை கட்டண உயர்வானது முற்றிலுமாக தங்கள் தொழிலை செய்ய இயலாத நிலைக்கு தள்ளிவிடும்.
எனவே, தொழில் முனைவோர் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகளை கருத்திற்கொண்டு, நிலை கட்டண உயர்வு மற்றும் உச்சபட்ச நேர மின் பயன்பாட்டு கட்டண உயர்வு ஆகியவற்றில் இருந்து குடிசைத் தொழில் மற்றும் குறுந்தொழில்களுக்கு முற்றிலும் விலக்கு அளித்து உதவி, தொழில் முனைவோர்களை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக, காட்மா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.