கோவை மதுக்கரை நகராட்சிக்குட்பட்ட 4வது வார்டு - அறிவொளி நகர், காமராஜ் நகர், சமத்துவநகர் பகுதியில் கடந்த 30 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி, அப்பகுதி மக்கள் மைல்கல் பகுதியில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை மதுக்கரை நகராட்சிக்குட்பட்ட 4வது வார்டு (கோவைபுதூர் திட்டபகுதி) அறிவொளி நகர், காமராஜ் நகர், சமத்துவநகர் பகுதியில் சுமார் 750க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அப்பகுதிகளில் கடந்த 30 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டும் அப்பகுதி மக்கள், இன்று மைல்கல் பகுதியில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பேசிய பொதுமக்கள், குடிசை மாற்று வாரியம் சார்பில் குனியமுத்தூர், ஆத்துப்பாலம், சுண்ணாம்பு காலவாய், குறிச்சி பிரிவில் இருந்து கடந்த ஒன்றரை வருடம் முன்பு குடிமற்றம் செய்யபட்டவர்களுக்கு கடந்த ஒரு வருடமாகவே குடிநீர் சரிவர வழங்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டினார்.
முறையாக குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 150 க்கும் மேற்பட்டோர் காலி குடங்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சுமார் 45 நிமிடம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அப்பகுதிக்கு வந்த குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், உடனடியாக குடிநீர் விநியோகித்து தினசரி தேவையை பூர்த்தி செய்யும் விதமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
பின்னர், போராட்டதை கைவிட்ட பொதுமக்கள், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்து நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.