செப்டம்பர் மாத இறுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து அத்திக்கடவு அவிநாசி திட்ட அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும், 1000-வாகனங்களோடு சென்னையை நோக்கி கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தையும் மேற்கொள்வதாக தெரிவித்தார்.
கோவை: அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை ஒரு மாதத்திற்குள் முடிக்க வில்லை என்றால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் மேற்கொள்வோம் என பா.ஜ.க விவசாய அணியின் மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் பேட்டியளித்துள்ளார்.
கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 1856-கோடியில் 3-ஆண்டுகளுக்கு முன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் தொடங்கப்பட்ட அத்திக்கடவு அவிநாசி திட்டம், தற்போது மிக மோசமாகக் கேட்பாரற்று புறக்கணிக்கப்பட்டு கிடப்பதாக தெரிவித்தார்.
இத்திட்டத்தினால் கோவையில் உள்ள சுமார் 2000-குளம் குட்டைகள் பயன் பெறும் எனவும், இதில் இன்னும் 800 குட்டைகளை இணைக்க வேண்டி உள்ளதாகவும் கூறினார். கொரோனா காலத்திலும் எடப்பாடி பழனிச்சாமி இத்திட்டத்தை தடையில்லாமல் இப்பணிகளை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
இத்திட்டம் 2021-ஜனவரி மாதம் முடிக்கப்பட வேண்டிய திட்டம் எனவும், ஆனால் திமுக அரசு பதவியேற்ற பின்பு இதுவரை அத்திட்டம் கிடப்பில் உள்ளதாகக் கூறினார். 2.2-கிமீக்கு பைப் போடாததால், 17-மாதங்களாக இத்திட்டம் கிடப்பில் கிடப்பதாக தெரிவித்தார்.
இத்திட்டம் மட்டும் கடந்த ஆண்டு முடக்கப்பட்டிருந்தால் பல்வேறு பயன்கள் கிடைத்திருக்கும் என தெரிவித்தார். மேலும், திமுகவின் திட்டமிட்ட தூண்டுதலால் சிலர் அப்பகுதியில் பைப் லைன் போடவிடாமல் தடுத்து வருவதாக தெரிவித்தார்.
திமுக ஆட்சி வந்த பிறகு பைப்லைன் போடுவதற்கு சில விவசாயிகள் வேண்டும் என்றே திட்டத்தை நிறுத்த இழப்பீடு கேட்பதாக தெரிவித்தார். இது குறித்து முதல்வருக்கு கடிதம் அனுப்பியும் எவ்வித பதிலும் இல்லை என தெரிவித்தார்.
இந்த அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தி செப்டம்பர் மாத இறுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து அத்திக்கடவு அவிநாசி திட்ட அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும், 1000-வாகனங்களோடு சென்னையை நோக்கி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் மேற்கொள்வதாக தெரிவித்தார்.
செப்டம்பர் மாத இறுதிக்குள் இத்திட்டத்தை முடிக்க அரசுக்கு கால அவகாசம் அளிப்பதாக கூறினார். மேலும் அதனை முடிப்பதற்கு அதிகாரிகள் அரசு அலுவலர்கள் தயாராக உள்ளதாகவும் அரசு தான் தாமதப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும், இத்திட்டத்தை தாமதப்படுத்தி மீண்டும் திட்டத்தின் மதிப்பை அதிகரித்து அதன் மூலம் லாபம் கொழிக்க திமுக துடிக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாகத் தெரிவித்தார். மேலும் மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த முன்னெடுப்பு இல்லை என்றும், சிலவற்றைச் செயல்படுத்தும் போது தமிழக அரசு செய்வது போல் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைச் செய்வதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்த உடன் மத்திய அரசின் முழுமையான திட்டங்கள் மக்களிடம் சேரும் என தெரிவித்தார்.