போதைப் பொருட்கள் விற்பனை, கடத்தல், உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, தொடர்பாக அனைத்து கோணங்களிலும் காவல் துறை மாவட்ட நிர்வாகம் இணைந்து செயல்படுவதாகவும் போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கோவை: கோவையில் நடைபெற்ற போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் ஆட்சியர் சமீரன், காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறும் போது:-
போதை பொருட்கள் விற்பனைக்கு எதிரான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கோவையில் போதைப் பொருட்கள் விற்பனை, கடத்தல், உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, தொடர்பாக அனைத்து கோணங்களிலும் காவல் துறை மாவட்ட நிர்வாகம் இணைந்து செயல்படுகிறது.
கஞ்சா விற்பனையை தடுக்க, எங்கிருந்து கஞ்சா அனுப்பப்படுகிறது என்பதைக் கண்டறிய இரண்டு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு அந்த தனிப்படையினர் பல்வேறு மாநிலங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே2 தருணங்களில் சுமார் 20 கிலோவுக்கு மேல் கஞ்சா பிடிபட்டு விசாரணை நடந்து வருகிறது.
கல்லூரி, பள்ளிகள் அருகே போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பழக்கத்தைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் கடந்த மாதம் கல்லூரி, பள்ளியில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 812 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஒரு புறம் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு, விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.