தெலுங்குபாளையம் பகுதியில் தமிழ்நாடு நாயுடு பேரவையின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பின் பேசிய மாநில தலைவர் குணசேகர் தமிழ்நாடு நாயுடு பேரவை 2 மாதத்தில் கட்சியை துவங்க உள்ளதாக தெரிவித்தார்.
கோவை: தெலுங்குபாளையம் பகுதியில் தமிழ்நாடு நாயுடு பேரவையின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகளுடனான ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.
மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகளுடன் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நாயுடு பேரவையின் மாநில தலைவர் முனைவர். குணசேகர் கூறும் போது:
தற்போது தமிழக அரசால் தாங்கள் பழிவாங்கப்பட்டதுடன், இடஒதுக்கீடு என்ற பெயரில் அரசால் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளோம்.. மேலும், நீண்ட நாள் கோரிக்கையான ஒவ்வொரு பிரிவினருக்கும் முறையான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அனைத்து சமூகத்தினரையும் சமமாக பார்க்க வேண்டும்.
இன்னும் 2 மாதங்களில் அரசியல் கட்சி துவங்க உள்ளோம்.இதற்காக தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்கள் சமர்பித்துள்ளளோம். விரைவில் தமிழ்நாடு நாயுடு பேரவை அரசியல் கட்சியாக உருவெடுக்கும். இதுவரைக்கும், கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனையடுத்து, பேசிய பிற்படுத்தப்பட்ட சமுதாய உரிமைக்கான கூட்டமைப்பின் தலைவர் ரத்தினசபாபதி பேசும் போது: சமூக நீதி என்பது ஓட்டு வங்கிக்காக மட்டுமே பேசப்படுகிறது. அனைவருக்கும் சமமான வழங்கும் வாய்ப்பு தான் சமூக நீதி, ஆனால், இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்டோர் நசுக்கப்படுகிறார்கள்.
இதே நிலை தொடர்ந்தால், அரசு வேலை வாய்ப்பு, உயர் கல்வி, மத்திய அரசின் வேலைகளில் கூட பிற்படுத்தப்பட்டோர் இருக்க மாட்டார்கள், எனத் தெரிவித்தார்.