துடியலூர் அருகே டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றிச் சென்ற லாரி ஆக்சில் உடைந்து தண்டவாளத்திற்கு நடுவே பழுதாகி நின்றதால் பரபரப்பு

துடியலூர் ரயில்வே கேட் அருகே புதிதாக அமைக்கப்பட்ட தண்டவாளம் சாலையில் இருந்து 1 அடி உயரமாக உள்ளதால், லாரி மற்றும் பேருந்து போன்ற தண்டவாளத்தை கடக்கும் வாகனங்கள் பழுதாகி நிற்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கோவை: துடியலூர் ரயில்வே கேட் வழியாக லாரி ஒன்று டாஸ்மாக் கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக மதுபானங்களை ஏற்றிச் சென்ற போது, தண்டவாளத்தை கடக்கும் போது, திடீரென ஆக்சில் உடைத்து பழுதாகி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

கோவை-மேட்டுப்பாளையம் இடையே செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக அந்த வழித்தடத்தில் இருந்த தண்டவாளத்தை புதுப்பிக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், தற்போது மாற்றப்பட்டு வரும் தண்டவாளங்கள் ஏற்கனவே இருந்த தண்டவாளங்களின் உயரத்தை விட சுமார் ஒரு அடி வரை உயரமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிலும், துடியலூர் பகுதியில் புதிதாக தண்டவாளங்கள் மாற்றப்பட்ட நிலையில் அது தார் சாலையில் இருந்து ஒரு அடி உயரமாக உள்ளதால், அவ்வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுவரை துடியலூர் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பல இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்துள்ளதாகவும், கார்களின் அடிப்பகுதி தண்டாவாளத்தில் உரசி சேதமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதிக பாரத்துடன் வரும் லாரிகள் தண்டவாளங்களை கடக்க முடியாமல் ஆக்சில் உடைந்து பழுதடையும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

இந்த நிலையில், நேற்றிரவு 8.45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை செல்லும் நீலகிரி விரைவு ரயிலுக்காக ரயில்வே கேட் மூடப்படும் நேரத்தில், அவ்வழியாக சுமார் 30 டன் எடையுள்ள டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது.

அப்போது, லாரியின் ஆக்சில் உடைந்து தண்டவாளத்தின் நடுவே பழுதாகி அப்படியே நின்றுவிட்டது. இதுகுறித்து தகவலறிந்து கேட் கீப்பர், நீலகிரி விரைவு ரயிலுக்கு உடனடியாக சிகப்பு விளக்கு காண்பித்ததால், லாரிக்கு 50 மீட்டர் முன்னதாகவே ரயில் நிறுத்தப்பட்டது. இதனால், அதிர்ஷ்டவசமாக லாரி மீது ரயில் மோதாமல், மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த பொது மக்கள் லாரியை தள்ளி தண்டவாளத்தில் இருந்து நகர்த்த முயன்றனர். ஆனால், லாரியில் 30 டன் அளவிற்கு சரக்கு இருந்ததால் நகர்த்த முடியவில்லை. இதையடுத்து கயிறு கட்டி இழுக்க முயன்றும் முடியாததால், கிரேன் வர வழைக்கப்பட்டு பெல்ட் மூலம் கட்டி இழுத்த போது, லாரி நகராமல் பெல்ட் அறுந்ததால், இரும்பு சங்கிலி மற்றும் இரும்பு ரோப் மூலம் கட்டி இழுக்க முயன்றும் முடியாமல் போனது.

பின்னர் ஜே.சி.பி இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரியின் பின்னால் இருந்து தள்ளி விட, முன்னால் கிரேன் இழுத்து தண்டவாளத்தில் இருந்து லாரியை நகர்த்தினர். இதனையடுத்து, உடனடியாக ரயில்வே கேட் மூடப்பட்டு அங்கு காத்திருந்த நீலகிரி விரைவு ரயில் ஒரு மணி நேர தாமதத்திற்கு பின் புறப்பட்டு சென்றது.

தண்டவாளத்தில் லாரி சிக்குவதற்கு சிறிது நேரம் முன்பு, இதே போல் மற்றொரு லாரியின் ஆக்சில் உடைந்தது என்றும், அவ்வழியாக வந்த அரசு விரைவு சொகுசு பேருந்தும் தண்டவாளத்தில் சிக்கி முன்பக்க படிக்கட்டு உடைந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே, உடனடியாக தண்டவாளத்தின் உயரத்திற்கு ஏற்றவாறு சாலையின் உயரத்தையும் அதிகரிக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...