விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பல்வேறு கஞ்சா விற்பனை வழக்குகள் நிலுவையில் உள்ளதும், போலீசிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க ஆந்திரா மற்றும் தேனி மாவட்டங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, சொகுசு காரில் வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
கோவை: கோவை மாநகர் முழுவதும் கஞ்சா, குட்கா மற்றும் போதை மாத்திரை விற்பனையை தடுக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அண்மை காலமாக ரோந்து பணிகளை அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில் சாய்பாபா காலனி போலீஸ் உதவி ஆய்வாளர் செங்கோல்நாதன் தலைமையிலான போலீசார் சாய்பாபா காலனி எம்.ஜி.ஆர் மார்க்கெட் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது மார்க்கெட் அருகே BMW சொகுசு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருப்பதை பார்த்துள்ளனர்.
ஆனால் அங்கிருந்து கடந்து சென்று மீண்டும் அதே பகுதிக்கு போலீசார் வந்த போது ஒரே இடத்தில் நீண்ட நேரமாக நிற்க வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அருகே சென்று காரில் இருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரில் சோதனையிட்ட போது அதில் பார்சல்களில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பிடிபட்டவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரது மகன் வீர சிவக்குமார் 55), மற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மணி என்பவரது மகன் கார்த்திக் (34) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது பல்வேறு கஞ்சா விற்பனை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், போலீசிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க ஆந்திரா மற்றும் தேனி மாவட்டங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, சொகுசு காரில் வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மேலும் மொத்த விற்பனைக்காகக் கோவை மாநகரில் பல்வேறு இடங்களுக்கு சென்று விற்பனை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து வீர சிவக்குமார் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 21 கிலோ கஞ்சா, ரூ.2.40 லட்சம் பணம் மற்றும் BMW சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.