கோவை போத்தனூர் பகுதியில் ஷியா பிரிவை சார்ந்த இஸ்லாமிய இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் அரபு மொழியில் துக்கப் பாடல்கள் பாடி வழிபட்டனர். தொழுகைக்குப் பின், இளைஞர்கள் அவர்களது உடலில் ரத்தம் வழிய மார்பில் அடித்துக் கொண்டு மொஹரம் பண்டிகையை துக்க நிகழ்வாக அனுசரித்தனர்.
கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் அருகே ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் மொஹரம் பண்டிகையை உடலில் ரத்தம் வழிய அடித்துக் கொண்டு துக்க நிகழ்வாக அனுசரித்தனர்.
உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் மொஹரம் பண்டிகை இன்று அனுசரிக்கப்படுகிறது. ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியைப் பொறுத்து கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதில், இஸ்லாமிய நாள் காட்டியின்படி முதல் மாதமான மொஹரம் மாதத்தின் பத்தாம் தேதி இமாம் உசேன் மறைவினை நினைவு கூறும் விதமாக ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள், மொஹரம் பண்டிகையை துக்க நிகழ்வாக அனுசரித்து வருகின்றனர்.
இந்த நிகழ்வில், இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் அரபு மொழியில் துக்கப் பாடல்கள் பாடி வழிபடுவர்.
அதன்படி, கோவை போத்தனூர் பகுதியில் ஷியா பிரிவை சார்ந்த இஸ்லாமியர்கள் தொழுகைக்குப் பின்னர், அவர்களது உடலில் ரத்தம் வழிய மார்பில் அடித்துக் கொண்டு மொஹரம் பண்டிகையை துக்க நிகழ்வாக அனுசரித்தனர்.