தடாகம் அடுத்த கே.என்.ஜி.புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக் கூடம் அருகே பள்ளி செயல்பட்டு வருவதால், அவ்வழியாக செல்லும் மாணவ - மாணவிகள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர்.
கோவை: கோவை மாவட்டம் தடாகம் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபான கூடத்தை மூட வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
தடாகம் அடுத்த கே.என்.ஜி.புதூர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் திருமண மண்டபம், சமீபத்தில் டாஸ்மாக் மதுபானக் கூடமாக மாற்றப்பட்டு, திறக்கப்பட்டது. FL2 சான்று பெற்று செயல்பட்டு வந்த இந்த மதுபானக் கூடத்தினால், அப்பகுதியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டி வந்த அப்பகுதி மக்கள், அந்த மது கூடத்தை மூட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
குறிப்பாக, மதுபானக் கூடம் அருகே ஒரு பள்ளி செயல்பட்டு வருவதால், அவ்வழியாக செல்லும் மாணவ - மாணவிகள் பாதிக்கப்படுவதாகவும், மது அருந்திவிட்டு வாகனங்கள் இயக்குவதால், அடிக்கடி விபத்துகள் நிகழ்வதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அந்த மதுபான கூடத்தை மூடக்கோரி அப்பகுதி மக்கள் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால், அங்கு வந்த, தடாகம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
பின்னர் அங்கிருந்து கலைந்து சென்ற பொதுமக்கள், நடவடிக்கை எடுக்கவில்லை என்ற பட்சத்தில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றனர். இந்த திடீர் சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.