வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி கிடையாது என வனத்துறையினர் அறிவிப்பு பதாகை வைத்துள்ளனர்.
கோவை: கோவை குற்றாலத்தில் இரண்டாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக திகழ்வது கோவை குற்றாலம்.
கோவை சிறுவாணி சாலை சாடிவயல் அடர்ந்த வனப் பகுதிக்கு நடுவே இந்த சுற்றுலா தலம் உள்ளதால் இங்குள்ள இயற்கை அழகையும், வன விலங்குகளை கண்டு ரசிக்கவும், அருவியில் குளித்து மகிழவும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம்.
அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து விட்டு, வனப்பகுதியில் உள்ள இயற்கை காட்சிகளைக் கண்டு ரசித்துச் செல்வர். கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில், பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் கோவை குற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கோவை குற்றாலத்திற்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பாறைகள் முழுவதும் மறைந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, கோவை குற்றாலத்திற்குச் சுற்றுலாப் பயணிகள் வரவும், குளிக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனத்துறையினர், அறிவிப்பு பதாகையும் வைத்துள்ளனர். அதில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.