அதிமுக நிர்வாகிகள் சிலருக்கும் தனிப்படை போலீசார் அழைப்பாணை அனுப்பியுள்ளனர். அந்த வகையில், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியரான மருது அழகுராஜிற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதால், இன்று தனிப்படை போலீசார் முன் கொடநாடு வழக்கு விசாரணைக்கு ஆஜரானார்.
கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடநாடு எஸ்டேட்டில் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதில், எஸ்டேட்டின் காவலாளியான ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமாா், ஜிதின் ஜாய், ஜம்சீா் அலி, மனோஜ் சாமி, குட்டி (எ) பிஜின் ஆகியோரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய காா் ஓட்டுநா் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 267 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜிடம் இன்று தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
'கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப்படையின் அழைப்பாணையை ஏற்று, இன்று காலை கோவையில் விசாரணைக்கு ஆஜராகிறேன்' என்று மருது அழகுராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல் வந்த நிலையில், நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பதவியிலிருந்து மருது அழகுராஜ் விலகியது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து விசாரணைக்கு ஆஜரான மருது அழகுராஜ் கூறியதாவது:-
தனியார் தொலைக்காட்சியில் வெளியான புலனாய்வு செய்தியில், கொடநாடு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் தங்களை தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்து வெளியிட்டேன். என்னை தொடர்ந்து இளங்கோவன் மற்றும் புலனாய்வு செய்தியாளரை விசாரிக்கும் பல தகவல் வெளியாகலாம் என தெரிவித்தார்.