சூலூர் அருகே மூதாட்டியின் கை, கால் மற்றும் வாயை பேக்கிங் டேப் மூலம் கட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: 82-வயது மூதாட்டி கை கால் மற்றும் வாயை பேக்கிங் டேப் மூலம் கட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சின்னசாமி மனைவி சரோஜினி(82). இவர் கணவர் இறந்த நிலையில் இவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.
இவர் அதிகாலையில் எழுந்து வாசலில் கோலமிட்டு விட்டு வீட்டின் முன் உள்ள பால் பாட்டிலை எடுத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியாகியும் பால் பாட்டில் எடுக்கப்படாமல் இருந்துள்ளது.
இதைப் பார்த்த அருகில் உள்ள மளிகை கடை வைத்திருக்கும் செல்வி என்பவர் சந்தேகமடைந்து வீட்டினுள் சென்று பார்த்துள்ளார். அப்போது சரோஜினி வாய் மற்றும் கை, கால்களில் பேக்கிங் டேப் எனப்படும் பிளாஸ்திரி ஒட்டப்பட்ட நிலையில் கட்டிலருகே கிடந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்து கூச்சலிட்ட செல்வி வெளியே ஓடி வந்து அருகில் இருந்தவர்களிடம் சொல்லி உள்ளே சென்று பார்த்த போது சரோஜினி உயிரிழந்தது உறுதியானது. இது தொடர்பாக அவர் சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் காவல் ஆய்வாளர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சரோஜினி உடலைக் கைப்பற்றி தடயங்களை சேகரித்தனர்.
தகவலறிந்து காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து சரோஜினியின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
மூதாட்டி கை கால் மற்றும் வாயை பேக்கிங் டேப் மூலம் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.