ஜல்லிக்கட்டிற்கு போராட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிக்கை ஏற்கத்தக்கது அல்ல எனவும், பா.ஜ.க தலைவர்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையை திரும்ப பெற வேண்டுமெனவும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெளகலான் பகாவி தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெளகலான் பாகவி, ஐல்லிக்கட்டுமீதான தடையை நீக்க தமிழக அரசு அவசர சட்டத்தை முன்கூட்டியே ஏன் கொண்டு வரவில்லை என கேள்வி எழுப்பினார். சென்னையில் போராட்டக்காரர்களுக்கு அடைக்கலம் தந்த நடுக்குப்பம், லுர்துகுப்பம் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். கலவரத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மீனவர்கள், மாணவர்கள் மீதான கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டுமெனவும், அவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
ஐல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடன் படத்துடன் போராட்டக்காரர்கள் வந்தார்கள் என போராட்டத்தை கொச்சைப்படுத்தி, திசை திருப்ப தமிழக முதல்வர் முயற்சிப்பதாகவும், 6 மாதங்களுக்கு முன்னர் இந்திய தேசிய லீக் கட்சி போராட்டத்தில் எடுக்கப்பட்ட பின்லேடன் படத்தை ஜல்லிக்கட்டில் எடுக்கப்பட்டதாக சட்டமன்றத்தில் முதல்வர் தவறான தகவல் அளித்து இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிக்கை ஏற்கத்தக்கது அல்ல எனவும், பா.ஜ.க தலைவர்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையை திரும்ப பெற வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியதை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியது மத்திய அரசின் லட்சணத்தை வெளிப்படுத்துகிறது எனவும், கோவை மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் சில இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட இயக்கங்கள் தான் பிரச்சணைக்கு காரணம் என குறிப்பிட்டது. ஜனநாயகத்திற்கு எதிரானது எனவும் அவர் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினார். பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமெனவும், அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்த மத்திய அரசை கண்டித்து ஜனவரி 31ம் தேதியை எஸ்.டி.பி.ஐ கருப்பு தினமாக அனுசரிப்பதுடன் நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.