திருப்பூர் மாநகரத்தின் 13-வது காவல் ஆணையராக பிரபாகரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகரில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழித்து, திருட்டுகளை குறைப்பதே தனது முதல் வேலை என தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த பாபு கடந்த சில தினங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து திருப்பூர் மாநகர் புதிய போலீஸ் கமிஷனராக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, திருப்பூர் மாநகர் புதிய போலீஸ் கமிஷனராக பிரபாகரன் ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பூர் மாநகரில் கஞ்சா பயன்பாடு அதிக அளவில் உள்ளதாகவும், அதனால் திருட்டுகள் நடந்து வருவதாகவும் புகார்கள் பெறப்பட்டுள்ளது.
எனவே, எனது முதல் பணியாக திருப்பூர் மாநகரில் கஞ்சாவை முற்றிலும் ஒழித்து, திருட்டுகளை தடுப்பதேயாகும். அதே போல் மாநகரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. இதனை முறைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
மேலும், ஆன்லைன் மூலம் மோசடிகள் நடந்து வருகிறது. எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும், வங்கி சார்பில் யாரேனும் போன் செய்தால் அவர்களிடம் பேச வேண்டாம் என்றும், எதுவாக இருந்தாலும் நேரடியாக வங்கிக்கு சென்று தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் எனக்கும் இது போன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.