மதுபான கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பல முறை மனு அளிக்கப்பட்ட நிலையில், கடையை மூடாமல் இருந்ததை தொடர்ந்து, 42-வது வார்டு கவுன்சிலர் மற்றும் 43-வது வார்டு கவுன்சிலர் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் கே.வி.ஆர் நகரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை மூடக்கோரி கவுன்சிலர்கள் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
திருப்பூர் மாநகராட்சி 42 வது வார்டுக்குட்பட்ட கே வி ஆர் நகரில் 1257 என்ற டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த மதுபானக் கடை குடியிருப்பு பகுதியில் உள்ளதாலும், கே.வி.ஆர்., நகர் பகுதி மெயின் ரோட்டில் இருப்பதாலும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.
எனவே, இந்த மதுபானக் கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பல முறை மனு அளிக்கப்பட்டது. ஆனால் கடையை மூடாமல் இருந்ததை தொடர்ந்து இன்று காலை 42-வது வார்டு கவுன்சிலர் அண்பகம் திருப்பதி மற்றும் 43-வது வார்டு மதிமுக கவுன்சிலர் சாந்தாமணி ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்கள் கே.வி.ஆர்., நகர் ரோட்டில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து உதவி கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில், போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். மறியலில் இருந்து களைந்த அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றனர். இந்த டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் தொடர்ச்சியாக போரட்ட்டம் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.