தமிழகத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி கோவை மாவட்ட பாமக சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: போதைப் பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி பாமக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் பாமக கட்சியினர் கஞ்சா குட்கா போன்ற போதைப் பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பாமக கட்சியினர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் மேற்கொண்டனர். கோவை மாவட்ட செயலாளர் கோவை ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கஞ்சா குட்கா போன்ற போதைப் பொருட்களை ஒழிப்பதற்குத் தமிழக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில், கண்டன மது போதைப் பொருட்கள் வேண்டாம் என்பதை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய மாவட்டச் செயலாளர் ராஜ், கஞ்சா குட்கா சிகரெட் போன்ற பொருட்கள் குறிப்பாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இளைஞர்களைக் குறி வைத்து விற்கப்படுவதாகவும், இதனை தடுப்பதற்கு தமிழக அரசின் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என கூறினார்.