செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருடியவரை சி.சி.டி.வி காட்சி அடிப்படையில் பல்லடம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ராயர்பாளையத்தை சேர்ந்தவர் சனுப். இவர் பல்லடம், சின்னக்கரை அருகே லட்சுமிநகர் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்ற அவர் இன்று காலை கடைக்கு வந்த பொழுது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அதனை தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த பொழுது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 65 புதிய செல்போன்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதிகாலை ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர் கடையில் இருந்த செல்போன்களை திருடி சென்றது தெரிய வந்தது.
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பல்லடம் போலீசார் அந்த மர்ம நபரை வலை தேடி வருகின்றனர்.