பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேரூர் கல்வி மாவட்ட அதிகாரி ரமேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
கோவை: கோவை அருகே உள்ள பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்வதாக கூறி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
கோவை சுகுணாபுரம் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் மீது குற்றம்சாட்டி 200-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், ஆசிரியர் கைது செய்யப்பட்டதாகவும், காவல்துறையினர் தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனிடையே, மாணவிகளின் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணை முடிவின் அடிப்படையில் 24 மணி நேரத்திற்குள் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை பேரூர் கல்வி மாவட்ட அதிகாரி ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியர் மீதான நடவடிக்கை குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முடிவெடுப்பார் என்றும் கூறினார்.