மனித உரிமை மீறலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நபர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டதை கண்டித்து, கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி தலைமையில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை மாநகர ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து, சாலைகளில் சுற்றி திரியும் ஆதரவற்ற நபர்களை மீட்டு, அவர்களுக்கு தேவையான சிகிச்சையளித்து காப்பகங்களில் சேர்த்து வருகின்றனர்.
இவ்வாறு கடந்த 4 நாட்களுக்கு முன் கோவை மாநகரில் சுற்றித்திரிந்த சுமார் 100க்கும் மேற்ப்பட்டோரை மீட்ட விழுப்புரத்தை சேர்ந்த கிறிஸ்தவ தன்னார்வ அமைப்பினர், அவர்களை தொண்டாமுத்தூர் அட்டுக்கல் பகுதியில் உள்ள தடை செய்யப்பட்ட தங்கும் விடுதியில் அடைத்து வைத்து துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை தொண்டாமுத்தூர் போலீசார் அங்குச் சென்று விசாரணை மேற்கொண்ட போது ஆதவற்றோர் மட்டுமல்லாமல், பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மற்றும் பணிக்குச் சென்று வீடு திரும்பியவர்களையும் தன்னார்வ அமைப்பினர் தூக்கி வந்ததும், அவர்களை அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக தன்னார்வ அமைப்பை சேர்ந்த ஜிபின் பேபி, சைமன் செந்தில்குமார், ஜார்ஜ், செல்வின், பாலசந்திரன், அருண் ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.
மனித உரிமை மீறலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட நபர்களை உடனடியாக ஜாமினில் விடுவிக்கப்பட்டதை கண்டித்து, கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி தலைமையில் சுமார் 250க்கும் மேற்பட்ட பாஜகவினர் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாஜகவினர் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார், பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியும், மாவட்ட எஸ்.பி. நேரில் வந்து உறுதியளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கோசங்களை எழுப்பினர்.
தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தின் முன்பு 300க்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில், மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் நேரில் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
மேலும், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த நிலையிலும், போராட்டத்தில் தொடர்ந்ததால் பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.