கோவை மாவட்டம் அரசூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் அன்பில் மகேஷ், அவர்களது குறை நிறைகளை மற்றும் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
கோவை: கோவை: "ஆசிரியர்களுடன் அன்பில்" என்ற தலைப்பில், அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுடன், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துரையாடினார்.
கோவை மாவட்டம் அரசூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் அன்பில் மகேஷ், அவர்களது குறை நிறைகளை மற்றும் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சேவை செய்து வரும் 3000 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும், என கல்வியாளர் சங்கமம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்:
எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதே மனுக்களை படிப்பதோடு இல்லாமல், நேரடியாக சென்று கள ஆய்வு செய்வேன்.
அதன் தொடர்ச்சியாக, அமைச்சராகவும் நேரடியாக ஒவ்வொரு மாவட்டமும் சென்று ஆசிரியர்களை சந்திக்கிறேன். ஒவ்வொரு பள்ளியின் பிரச்சனையை தீர்க்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.
ஆசிரியர்களின் மனக்குமுறலை சரி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கட்டாயம் என்பதை நம்புகிறேன். ஆட்சிக்கு வந்த மூன்று மாத காலத்தில் அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் அழைத்து பேசினேன். ஆசிரியர்களின் கோரிக்கைகளை உள்வாங்கியுள்ளேன். அவற்றை படிப்படியாக தீர்த்து வைக்க முடியும். அதன் அடிப்படையில் தான் அரசாங்கம் நடை போட்டு வருகிறது.
மருத்துவர்களை விட உயர்ந்தவர்கள் ஆசிரியர்கள் தான். ஆசிரியர்கள் பெருமைக் கூறியவர்கள். ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க ஆசிரியர்களின் பங்களிப்பு மிக முக்கியம்.
"ஆசிரியர் மனசு" என்று பெட்டி வைக்கப்படும். அதன் மூலம் ஆசிரியர்களின் கோரிக்கைகளை தெரிந்து கொள்ள முடியும். எனது அலுவலகங்களில் இந்த பெட்டி மூலம் கோரிக்கைகள் பெறப்பட்டு, நிறைவேற்றப்படும். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். மத்திய அரசின் திட்டங்கள் சுலபமாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனக்கு அறிவாற்றலை தந்த ஆசிரியர் பெருமக்கள் பக்கம் என்றைக்கும் இருப்பேன். பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளை மற்ற குந்தைகளுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம். அந்தந்த குழந்தையின் தனி திறமையை கண்டறிய வேண்டும். பள்ளியில் அடி வாங்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. நானும் அடி வாங்கியுள்ளேன். வகுப்பில் தூங்கி ஆசிரியரிடம் திட்டு வாங்கியுள்ளேன்.
ஆட்டிசம் போன்ற பாதிப்பில் இருக்கும் குழந்தைகளுக்கு வீட்டு வழி கல்வியை கொடுத்து வருகிறோம். இது போன்ற குழந்தைகளின் பெற்றோரை இறைவனாக பார்கிறேன்,
இவ்வாறு அவர் பேசினார்.