பள்ளிக்கூடங்கள் திறப்பதை விடுத்து மதுக்கடைகளை திறக்க முனைப்பு காட்டும் திமுக அரசை கண்டித்தும், பள்ளிக்கூடங்கள் இல்லாத நிலையில் மதுக்கடைகள் தேவையா? என்று அரசுக்கு கேள்வி எழுப்பும் விதமான பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கோவை: பள்ளிக்கூடங்கள் திறப்பதை விடுத்து மதுக்கடைகளை திறக்க முனைப்பு காட்டும் திமுக அரசை கண்டித்து கோவையில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் பல அரசு பள்ளிகளை முன்னாள் முதல்வர் காமராஜர் தொடங்கி வைத்தார். ஆனால் இன்று கொஞ்சம் கொஞ்சமாக அரசு பள்ளிகளை மூடி வருகின்றனர்.
இந்த வருடம் மட்டும் 40 அரசு பள்ளிகளை மூடியுள்ளனர்.
669-அரசு பள்ளிகளில் ஒற்றை இலக்கில் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. வரும் காலங்களில் இந்தப் பள்ளிகளும் மூடப்படலாம். இதுதான் இன்றைய அரசு பள்ளிகளின் நிலைமையாக உள்ளது. ஆனால் தமிழக அரசோ பள்ளிகளை திறப்பது, அரசு பள்ளிகளை மேம்படுத்துவது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மதுக்கடைகளை திறப்பதிலேயே முனைப்பு காட்டி வருகிறது.
இதனை கண்டித்து கோவையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை பகுதியில் நடைபெற்றது. கோவை பாமக மேற்கு மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாட்டையும் இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கும் மதுக்கடைகளையும் மதுக்கூடங்களை திறக்கும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மேலும், பள்ளிக்கூடங்கள் இல்லாத நிலையில் மதுக்கடைகள் தேவையா? என்று அரசுக்கு கேள்வி எழுப்பும் விதமான பதாகைகளை ஏந்தி பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு உடனடியாக இந்த போக்கை நிறுத்தி கொள்ளவில்லை என்றால் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கோவையில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தனர்.