காந்திபுரம் - ஆனைகட்டி செல்லும் பேருந்து கணுவாய் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் போது, பெண் பயணிகள் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் உள்ள கதவில் அமர்ந்து செல்லும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை: கோவை மாவட்டம் காந்திபுரம்- ஆனைகட்டிக்கு செல்லும் தனியார் பேருந்தில் கூட்டம் அதிமாக இருந்ததால், பெண் பயணிகள் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் உள்ள கதவில் அமர்ந்து செல்லும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காந்திபுரம் - ஆனைகட்டி செல்லும் பேருந்து கணுவாய் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் போது, அஜாக்கிரதையாக பயணித்த காட்சிகளை பொதுமக்களில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதவிட்டுள்ளார்.
குறிப்பாக, ஆனைகட்டிக்கு செல்லும் வழி மலைப்பாதை என்பதால், வளைவுகளில் பேருந்து செல்லும் போது, இவ்வாறு அஜாக்கிரதையாக பயணிப்பது மிகவும் ஆபத்தானது என்றும் ஆனைகட்டிக்கு இரண்டு தனியார் பேருந்துகள் மற்றும் மிகக் குறைந்த அளவிலேயே அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால், பொதுமக்கள் இவ்வாறு நெரிசலில் பயணிக்கும் சூழலுக்கு தள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, கோவையில் இருந்து ஆனைகட்டிக்கு கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது. அதே சமயம், கூடுதல் வருமானத்திற்காக ஆசைப்பட்டு, அதிகமான பயணிகளை ஏற்றிச்செல்லும் தனியார் பேருந்துகள் மீதும் காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.