மாநகரில் சில இடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் செஸ் போர்டு போன்ற மின் விளக்குகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பொதுமக்கள் இதனை பார்த்து செல்பி எடுத்துச் செல்கின்றனர்.
கோவை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதையொட்டி, தமிழக அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி பிரதான அலுவலகம் டவுன்ஹால், அனைத்து மண்டல அலுவலகங்கள், வ உ சி பூங்கா, வ உ சி மைதானம், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ், டைடல் பார்க், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டிகள் நடைபெறுவது குறித்த விளம்பர எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன.
அதே போன்று கோவை மாநகரில் சில இடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் செஸ் போர்டு போன்ற மின் விளக்குகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பொதுமக்கள் இதனை பார்த்து செல்பியும் எடுத்து கொள்கின்றனர்.