அண்ணாமலை உடன் செல்பி போட்டி சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடக்கும் என திருப்பூர் பாஜக விளம்பரம் செய்திருந்த நிலையில், இந்த நிகழ்ச்சியை கல்லூரியில் நடத்த நாங்கள் அனுமதி அளிக்கவில்லை என்றும் அனுமதியின்றி கல்லூரியின் பெயரை தவறாக பயன்படுத்துவதாக கல்லூரி முதல்வர் அறிக்கை.
திருப்பூர்: "செல்ஃபி வித் அண்ணா " போட்டிக்கு உறுப்பினர் சேர்க்கை முகாம் அரசு கல்லூரிகளில் நடைபெறும் என பாஜக விளம்பரம் செய்த நிலையில், கல்லூரி முதல்வர்கள் மறுத்ததால், கல்லூரி பேராசிரியர்களுடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு பாஜகவினர் இடையூறு செய்வதாக மாணவிகள் பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் "செல்பி வித் அண்ணா" என்ற போட்டி நடத்தப்படுவதாகவும், அதில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் எனவும், பாஜகவில் இணைந்து தேசத்தின் கரத்தை வலுப்படுத்த வாருங்கள் எனவும், இதற்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மற்றும் பல்லடம் சாலையில் உள்ள எல் ஆர் ஜி பெண்கள் கலைக் கல்லூரி என்ற இரண்டு கல்லூரிகளிலும் இன்று நடைபெறுவதாக விளம்பரம் செய்யப்பட்டது.
இந்த விளம்பரத்தை அறிந்த இரண்டு கல்லூரி முதல்வர்களும் இதற்கும் தங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை எனவும், தங்களிடம் அனுமதி பெறப்படாமல் கல்லூரியின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் மற்றும் கோவை மண்டல கல்வி இயக்குனரகம் என மூன்று இடங்களுக்கும் கடிதம் மூலமாக விளக்கம் அளித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில், திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி கல்லூரிக்கு சென்ற பாஜகவினர் கல்லூரி வளாகத்திற்கு வெளியே பிரச்சாரத்தில் ஈடுபட முயன்றனர் தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர் முன்பக்க கதவை திறக்காமல் பின் வழியாக தேர்வு முடிந்த மாணவிகளை வெளியே அனுப்பினார்.
இந்த தகவலை அறிந்த பாஜகவினர் கல்லூரிக்குள் நுழைந்து பேராசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முன் பக்க கதவுகளை திறக்க வலியுறுத்தினர்.
அதன் பிறகு கல்லூரியை விட்டு வெளியே வந்த மாணவிகளிடம் பாஜகவினர் துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சில மாணவிகள் தேர்வு உள்ள சமயத்தில் தங்களுக்கு இது போன்ற இடையூறுகளை எதற்காக ஏற்படுத்துகிறீர்கள் தங்களால் வெளியே வர முடியாத சூழலுக்கு பாஜகவினர் தங்களை உள்ளாக்குவதாக குற்றம் சாட்டி சில மாணவிகள் பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பாஜகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கல்லூரிக்கு முன்பு இதுபோன்ற பிரச்சார நிகழ்ச்சி நடத்த போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற சூழலில் பாஜகவினர் அனுமதி பெறாத காரணத்தை கூறி கலைந்து போக வேண்டும் என போலீசார் கூறினர் . இதனை எடுத்து பாஜகவினர் பிரச்சாரத்தை கைவிட்டு புறப்பட்டனர்.